Header Ads Widget

Responsive Advertisement

இயேசு பிறந்த போது என்ன நடந்தது? கிறிஸ்மஸ் - சிறப்புச் செய்தி போதகர் அற்புதராஜ் அவர்கள் - (2010)

  உலகமெங்கிலும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேளிக்கைகள்,  விருந்து மற்றும் அலங்காரங்களினால் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. ஈராயிரம் வருடங்களுக்கு முன் இயேசு இவ்வுலகில் பிறந்த போது என்ன நடந்தது என்பதை சற்று ஆராய்வோமாகில் நம் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவைகளாக மாறும்.

ஞானிகளின் வருகையும் தொழுகையும்
உலக இரட்சகராக இயேசு பிறந்திருக்கிறார் என்கிற செய்தி தேவ ஜனங்களாகிய யூதர்களுக்கே தெரியாமல் இருந்தது. ஆனால் அறிவில் சிறந்த சாஸ்திரிகள் ஒரு சிலர் கிழக்கு தேச நாடுகளில் இருந்து இரட்சகர் பிறப்பை தம் ஞானத்தினால் அறிந்தனர். விண்மீன் வழிகாட்ட எருசலேம் சேர்ந்தனர். எருசலேம் வந்ததும் சாஸ்திர்கள் அதுவரை தங்களுக்கு வழிகாட்டின விண்மீனை நோக்காமல்  நேராக அரண்மனை சென்று யூதருக்கு இராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்டனர். யூதர்களின் இராஜாவாகிய ஏரோதின் அரண்மனையில் இக்கேள்வி பெரும் சல சலப்பை உண்டாக்கியது.
            இயேசுவைப் பற்றிய எவ்வித தகவல்களும் அவர்களுக்கு இல்லை. இஸ்ரவேலர்களுக்கோ ஏற்கனவே வேதாகமத்தில் தெளிவான தீர்க்கதரிசனங்கள் இருந்தன. இம்மானுவேல் எங்கே பிறப்பார், எப்பொழுது பிறப்பார் என்றெல்லாம் அவர்களுக்கு வேதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்கள் இரட்சகர் இயேசுவை எதிர்பார்க்கவும் இல்லை, அதைக் குறித்து யோசிக்கவும் இல்லை.
             சாஸ்திரிகளின் கேள்வியினால் தூண்டப்பட்ட யூத வேத பாரகர்கள் தீர்க்கதரிசியினால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டு பெதலகேமில் இயேசு பிறப்பார் என்ற உண்மையை உரைத்தனர். சாஸ்திரிகளுக்கு பதில் கிடைத்தது, ராஜாவுக்கோ திகில் பிடித்தது. தனக்கு போட்டியாக வேறு யாரும் வந்து விடக் கூடாதே என்ற பதை பதைப்பு. உள்ளூர ஒரு சதி திட்டம் தீட்டினான். ஆனாலும் அது வெற்றி பெற வில்லை.
                 எருசலேமுக்குப் பின் பெதலகேம் நோக்கி தங்கள் பயணத்தை துவக்கிய சாஸ்திரிகளுக்கு மறுபடியும் கிடைத்தது விண்மீனின் வழிகாட்டல். நட்சத்திரத்தைக் கண்டு அகமகிழ்ந்து பயணத்தைத் தொடர்ந்து தேவன் மனிதனாக அவதரித்த மாட்டுக் கொட்டகை வந்து சேர்ந்தனர். அங்கே இயேசுவைக் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள். தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து காணிக்கைகளையும் அவர் முன் வைத்தனர். அதன் பின்பே தங்கள் தேசத்திற்கு திரும்பினர்.

ஞானிகளின் வருகையும் தொழுகையும் நமக்கு சொல்லும் செய்தி என்ன?
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமியா.29:13) என்று வேதம் கூறுகிறது. கிழக்கு தேசத்தைச் சேர்ந்த அந்த சாஸ்திரிகள் (இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்வதுண்டு) தங்களிடம் தேவனுடைய வார்த்தை இல்லை என்ற போதிலும் அவரைக் காணும்படி தேடினர். தேடுகிறவன் எவனும் கண்டுகொள்கிறான் என்ற வ்சனத்திற்கேற்ப அவர்கள் ஆண்டவரைக் கண்டு பணிந்து கொண்டனர். அதுமாத்திரமல்ல, இயேசுவுக்கு கனத்தையும் மகிமையையும் வயது, கல்வி என்ற எந்த வித்தியாசம் பாராது அவரைப் பணிந்தனர். விலையேறப்பெற்ற பொன், வெள்ளி, தூப வர்க்கங்களை படைத்து மகிழ்ந்தன்ர். தங்களைத் தாழ்த்தினர். அதன் பின்பே காணிக்கைகளைப் படைத்தனர்.

அறிவிப்பும் அகமகிழ்வும்
இயேசு பிறந்த செய்தி உலக மனிதர்களுக்கு வேண்டுமானால் தெரியாமலிருந்திருக்கலாம். ஆனால் தேவன் மனிதனாக அவதரித்ததை தேவதூதர்கள் கண்டு மகிழ்ந்து அச்சந்தோசத்தின் செய்தியை அறிவிக்க விரைந்தனர். மிகவும் புகழ் பெற்றவர்களையும் வசதிபடைத்தவர்களையும் தேடி அவர்கள் செல்லாமல், இரவில் மந்தைகளை காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சென்றனர். அங்கே தேவ தூதனின் வருகையால் மகிமை பிரகாசித்தது, மேய்ப்பர்களை பயம் சூழ்ந்தது. பயந்த மேய்ப்பரை தூதன் பார்த்து,”பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றான் (லூக்கா 2:10-12).
                 மிகுந்த சந்தோசத்தின் செய்தியை தூதர் அறிவித்த அந்த ஷணமே திரளான தேவ தூதர்கள் அவனுடன் இணைந்து ”உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் தேவனை துதித்தார்கள்.
                   தேவ தூதர்களின் அகமகிழ்வையும் அறிவிப்பையும் கண்ட மேய்ப்பர்கள் ஆர்வத்துடன் இயேசுவைக் காண விரைந்தனர். சொல்லப்பட்டவைகள் அனைத்தும் முற்றிலும் உண்மை என கண்டு இயேசுவைக் குறித்து பலருக்கும் ஆச்சரியப்பட்டனர். கேள்விப்பட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

ஆட்டிடையர் அறிவிப்பு - அகமகிழ்வு - ஆச்சரியம்
    இந்நாட்களில் கிறிஸ்துமஸ் கீத பவனி என்ற பெயரில் பல இடங்களுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட் ஒருவருடன் பெரும்பாலான சபையார் செல்கிறதைக் காண்கிறோம். அதிலும் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கே கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அறிவிக்கப்படும் துர்பாக்கிய நிலைமையைக் காண்கிறோம். இயேசு பிறப்புச் செய்தி அவரைக் குறித்து அறியாத, வய்ல்வெளி மேய்ப்பர்களுக்கே தூதர்களால் அறிவிக்கப்பட்டது. இன்றும் சுவிசேச களங்களில் இயேசுவைக் குறித்து அறியாத பல கோடிபேர் உண்டு. கிறிஸ்துமஸை ஒரு பண்டிகையாகக் கொண்டாடாமல் அவரின் பிறப்பை அறியாதவர் அறிந்து கொள்ளச் செய்யும் அறிவிப்பு நாளாக அனுசரிக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
                              தூதர்களில் நற்செய்தி அறிவிப்பு மட்டும் மேய்ப்பர்களை இயேசுவைக் காணச் செல்லும்படி தூண்டவில்லை. மாறாக அவர்கள் பாடிய உற்சாக துதி பாடல் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனாலும் இன்று நாம் பாடும் பெரும்பாலான கிறிஸ்துமஸ் பாடல்கள் தாலாட்டுப் பாடல்களாக இருப்பது ஏன்? நம் பாடல்கள் தூங்குகிறவர்களை இன்னும் தூங்கச் செய்யவா? அல்லது அவர்களை தட்டி எழுப்பி மீட்பர் பிறந்தார் என மீட்பின் செய்தியை அறிவிப்பதற்கா? யோசித்து பார்ப்போமாக.
    தேவதூதர்களின் அறிவிப்பு, பரம சேனைகளின் கீதம், மேய்ப்பர்களின் ஆச்சரியம் இவை எல்லாம் உண்மை என்றாலும் மரியாளுக்கு அவை பரவச உணர்வை அளிப்பதற்குப் பதிலாக, சிந்தனை உணர்வை அளித்தது.
    கிறிஸ்துமஸ் ஆடம்பரம், அலங்காரம், ஆரவாரம் இவை அனைத்தும் நமக்கு ஒரு பரவச உணர்வைக் கொண்டு வருவதற்காக அல்ல. கிறிஸ்துவின் பிறப்பு நாம் சிந்தித்துப் பார்ப்பதற்காகவே. கிறிஸ்தவர்களாகிய நாம் உற்சாகமாக கிறிஸ்து பிறந்தார் என அறியாத மாந்தரிடம் அறிவிப்போம். நம் அறிவிப்பும் ஆனந்தமும் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தூண்டி ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கட்டும். கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொருவரின் அனுபவமாகட்டும்.
  இயேசு ஏன் பிறந்தார்
ஏழைக் கோலமதாய்
பாவியை மீடக பாசமாய்
பாரில் வந்துதித்தார்

Post a Comment

1 Comments

  1. //தேவ ஜனங்களாகிய யூதர்களுக்கே...//

    அப்போ .. நாமெல்லாம் யாரு...?

    ReplyDelete