Header Ads Widget

Responsive Advertisement

தரிசித்துநடவாமல் விசுவாசித்து நடப்பது எப்படி?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். பொதுவாக இந்த உலகமக்கள் தம்முன்னால் இருக்கும் பிரச்சனைகள் தேவைகள் லௌகீகத்திற்கடுத்த காரியங்கள் ஆகியவைகளைக் குறித்து அதிகமாகக் கவலைப்படுகின்றார்கள். மேலும் தங்களுடைய பெலத்தினாலும் உலகப்பிரகாரமான ஊகங்களினாலும் தங்கள் தேவைகள், பிரச்சனைகளை ஆராய்ந்து கவலைப்பட்டுக் கலங்குகிறார்கள், போராடி சோர்ந்து போகின்றார்கள். நாமும் கூட பலவேளைகளில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கித் தடுமாறுகிறோம், கலங்குகிறோம். ஆனால் பிரியமானவர்களே நம்முடைய அருமையான தேவன் நம்மை அஞ்ஞானிகளைப் போல கலங்க அனுமதித்திருக்கவில்லை என்பதே உண்மை.

தரிசித்து நடத்தல் என்றால் என்ன?
2 கொரிந்த்கியர் 5 ஆம் அதிகாரம் 6 வசனம் இப்படியாகச் சொல்லுகிறது " நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்." இதைக்குறித்து சற்றே தியானிக்கலாம், பொதுவாக நாம் காண்கின்றவைகள் மற்றும் அகப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்ற சூழ்நிலைகள் பிரச்சனைகள் ஆகியவைகளைப் பார்த்து மாம்சமும் மனித இயல்பும் ஒரு பொதுவான முடிவுக்கும் எதிர்பார்ப்புக்கும் வந்துவிடுகின்றது. உதாரணமாக யோசுவா ஆறாம் அதிகாரத்தில் நமதாண்டவர் எரிகோ கோட்டையை ஏழு நாட்கள் சுற்றிவர அது தானாக இடிந்து விழும் என்று வாக்களிக்கின்றார். இதே ஆண்டவர் தான் இன்றும் மாறாதவராக இருக்கின்றார்.  இந்த காரியத்தில் மனித இயல்பும் மாம்சமும் என்ன நினைக்கும்? ஒரு கோட்டையை ஏழுநாள் சுற்றிவந்து கொம்புகளைஊதி ஆர்பரித்தால் விழுகுமா? அதை உடைக்க சம்மட்டியும், கடப்பாரையும் வேண்டுமே? அல்லது வெடிமருந்துகள் வேண்டுமே என்று நினைக்கத் தோண்றும் அல்லவா? இது இயல்புதானே மனிதத்தில் நாம் யோசிக்கும் போது இதில் தவறொன்றும் இல்லை...

இப்படித்தான் பிரியமானவர்களே நம்முடைய தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றிற்காக மாம்சீகத்தில் யோசித்து சோர்வடைந்துவிடுகின்றோம், அல்லது மாம்சத்தில் போராடிக்கொண்டிருக்கிறோம். நம் முன்னால் இருக்கும் பிரச்சனைகள் தேவைகளை எதார்த்த கண் கொண்டு பார்ப்பதே தரிசித்து நடத்தல் என்று சுருக்கமாக சொல்லலாம்.

தரிசித்து நடத்தல் வேதத்தின்படி சரியா?

தரிசித்து நடத்தல் என்பது தேவனுடைய பார்வையில் பைத்தியகாரத்தனமாக இருக்கின்றது, மனித எதார்த்தமும் நீதியும் தேவனுக்கு பொய்யாய் இருக்கின்றன. நம்முடைய ஆவிக்குரிய முற்பிதா ஆபிரகாம் சாராளுடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் 100 வயது நிரம்பிய கிழவன் அவர், சாராளோ இன்னும் மோசம், மருத்துவ வசதிகொண்ட இக்காலத்தில் கூட பெண்களுக்கான வழிபாடு நின்றுபோன பிறகும், வயது முதிர்ந்த காலத்திலும் இயல்பான இயற்கை வழியில் குழந்தை பெறுதல் என்பது இயலாத காரியம். ஆனால் அவர்களுக்கோ குழந்தை பிறந்தது. இன்று உலகம் முழுவதும் அவர்களுடைய சந்ததியினர் இப்போதும் இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். மேலும் ஆபிரகாமும் சாராளும் இது எப்படி நடக்கும் என்று நம்பிக்கையில்லாமல் இருந்திருப்பார்களானால் இஸ்ரவேல் மக்கள் இன்று பூமியில் இருந்திருக்கவே மாட்டார்கள். மனித நீதி அங்கு செயலிழந்து போய்விட்டது

அங்கே நடந்தது என்ன? விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.(எபிரெயர் 11:11), ஒருவேளை உன் மனித எதார்த்தத்தில் உன் பிரச்சனைக்கும் தேவைக்கும் முடிவு தேடித்தேடி சோர்ந்து போயிருக்கின்றாயா? உன்னைச்சுற்றி நடப்பதைக் கண்டு கலங்காதே.. காரணம் வேதம் சொல்லுகின்றது காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.(II கொரிந்தியர் 4:18) என்று, ஆம் நாம் காண்கின்றவைகள் யாவும் நிரந்தரமானது அல்ல அவையாவும் மாயையாய் இருக்கின்றது. ஆகவே நாம் தரிசித்து நடத்தல் தேவனுடைய பார்வையில் அருவருப்பானது ஆகும்,

தரிசித்து நடக்காமல் இருப்பது எப்படி?
காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?(ரோமர் 8:24) என்று ஆவியானவர் நம்முன்னால் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். மனித முயற்சிகள், மாம்ச பெலன் ஆஸ்தி அந்தஸ்து போன்ற எதையும் நம்பாமல் தேவன் நமக்குத்தந்தருளின வேத வசனங்களின் மேல் நம்பிக்கை வைத்து, சூழ்நிலைகளை நாம் காண்பது நாம் தரிசித்து நடக்காமல் இருக்க நாம் வைக்கும் முதல்படியாகும்.


சில நாட்களுக்கு முன்னால் ஒரு வயதான முதியவரை சந்தித்தேன். தன் குழந்தைகள் கைவிட்டுவிட்ட நிலையில் தள்ளாதவயதிலும், மற்றவர்களுக்கு உதவி செய்துகொண்டு தன் சொந்தத் தேவைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அவர் சொன்ன ஒரு காரியம் தேவனை மாத்திரமே நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். தேவ நாமம் தூசிக்கப்பட ஒருநாளும் நடந்துகொள்ளமாட்டேன். இந்தப்பாடுகள் கொஞ்ச நாட்கள் தான், ஆனால் பரம தகப்பனின் பாதத்தில் நித்தியமாக நான் இளைப்பாறுவது உறுதி என்று மகிழ்ச்சியோடு சொன்னார். சிறிது தூரம்கூட நடக்கமுடியாத அளவுக்கு பெலவீணமான‌ மனிதரின் நம்பிக்கையைப் பாருங்கள், அவர் இன்றைய சூழ்நிலையின் மீது சிறிதும் அக்கரையோ கவலையோ படவில்லை, தன்னைக் கைவிட்டவர்களை தூஷிக்கவோ சபிக்கவோ இல்லை, மாறாக அவர்களுக்காக ஜெபிக்கிறார். உலக மனிதர்கள் பிள்ளைகள் கைவிட்டால் புலம்புவதையும், சாபம் விடுவதையும், நம்பிக்கையில்லாமல் அழுவதையும் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த மனிதனுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை நம்பிக்கை?

அவர் தற்போது அவர் கண்டுகொண்டிருக்கின்ற சூழ்நிலையைக் குறித்து சிறிதும் கவலைப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை, ஆம் அந்த விசுவாசமே இந்த உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.(I யோவான் 5:4),
 
விசுவாசித்து நடப்பது என்றால் என்ன?

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.(எபிரெயர் 11:1) என்று வேதம் விசுவாசத்துக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. இதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன ஒன்று "நம்பப்படுகின்றவைகளின் உறுதி"  மற்றொன்று "காணப்படாதவைகளின் நிச்சயம்"

விசுவாசித்து நடத்தலின் முதல்படி நம்பப்படுகின்றவைகளில் உறுதி

நம்முடைய பரம தகப்பன் தன் சொந்த ஜனங்களான இஸ்ரவேல் மக்களுக்குக் கூட கொடுக்காத ஒரு வாக்குறுதியை நமக்குக் கொடுக்கின்றார். ஆம் அவருடைய ஒரே பேரான குமாரனை கொடுத்த நான் உனக்கு மற்றவைகளைக் கொடுக்காமல் இருப்பேனோ?(ரோமர் 8:32) என் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் நான் மகிமைப்பட அவர் திருப்பெயரால் கேட்பவைகளை நான் செய்வேன் என்றும் நம்முடைய விசுவாசத்தைப் பெருக்குகிறார்(யோவான் 14:13 ), இதுவரைக்கும் என் திருப்பெயரால் எதுவும் கேட்கவில்லை கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.(யோவான் 16:24) என்று குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அங்கலாய்க்கிறார். எப்படி ஒரு அருமையான தேவன் பாருங்கள். இந்த வசனங்கள் நாம் கேட்கிறவைகளை தேவன் தருவார் என்ற‌ நிச்சயத்தை உறுதிப்படுத்துகின்றது. இப்படிப்பட்ட அருமையான தேவன் மீது விசுவாசம் வைக்காமல் மாம்ச சித்தத்தில் ஓடுவது எத்தனை அறிவீணம்?

அடுத்ததாக கேட்பதற்கு சோம்பல்
இதில் அடுத்தகட்டம் இன்னும் மோசமானது ஜெபிப்பதற்கு அதாவது கேட்பதற்கு சோம்பேறித்தனம், தேவன் நம்மோடு தன் தேவைகளை சந்தித்துக் கொள்வதற்காகவாவது நம்மோடு உறவாடமாட்டானா? என்ற ஏக்கத்தில் தான் கேளுங்கள் அப்போது பெற்றுக்கொள்வீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அர்த்தமில்லாமல் 2 நிமிட ஒரே மாதிரியான வாய்மால ஜெபத்தை செய்துவது அவருக்கு எத்தனை துயரைத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா?

எனக்கு என் தேவன் இருக்கின்றார், என் தேவைகளையும் பிரச்சனைகளையும் அவரிடம் நான் கவலைப்படாமல் கேட்பேன்(பிலிப்பியர் 4:6) அவர் எனக்குத் தருவார் என்ற நிச்சயம் நம் இருதயத்தில் வேண்டும். மேற்கண்ட வசனங்களிலுள்ள வாக்குறுதிகள் கர்த்தர் மேல் நாம் பற்றுதலாய் இருக்க விசுவாசிக்க நம்மை திடப்படுத்துகின்றன. தேவன் மேல் விசுவாசம் இல்லாமல் அவருக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம்(எபிரெயர் 11:6)


விசுவாசித்து நடத்தலின் இரண்டாம் படி "காணப்படாதவைகளின் நிச்சயம்"
காணப்படாதவைகளின் நிச்சயம் என்பது மனித உணர்வுகளாலும் அல்ல, அறிவினாலும் அல்ல, சூழ்நிலைகள் யாவும் எதிராக இருந்தாலும் சரி, நம்முடைய இருதயத்தில் வேத வசனம் இப்படிச் சொல்லுகிறதே தேவன் நிச்சயம் என்னைக்கைவிடமாட்டார் என்ற உறுதியில் இருக்கவேண்டும், அந்த காணப்படாத சூழ்நிலை நிச்சயம் தேவன் கொடுப்பார் என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்க வேண்டும்.

விசுவாசத்தில் ஊழியம் செய்துவரும் ஒரு ஊழியர் ஒருமுறை என்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது இப்படியாகச் சொன்னர், என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போகும் சூழ்நிலைகள் வரும் அப்போதெல்லாம் நான் கவலைப்படுவதற்கு பதில் மகிழ்ச்சியோடு இருப்பேன் காரணம் தேவன் அற்புதம் செய்யும் நேரம் அது, அந்த நேரம் தான் கர்த்தர் எத்தனை நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க கிடைத்திருக்கும் தருணம் என்று சொன்னார், ஒருவேளை மாம்சத்தில் கலங்குகிறவராக இருந்தால் என்ன செய்திருப்போம்? தேவன் அற்புதம் செய்வதை மறுதலித்து விட்டு மனிதர்களைத் தேடி ஓடுவோம், ஆனால் அந்த விசுவாசத்தில் ஊழியம் செய்யும் ஊழியர் பாருங்கள் தன்னுடைய காணப்படுகின்ற சூழ்நிலையைக் குறித்து கவலைப்படாமல், தேவனுடைய கரம் அற்புதம் செய்யும் வேலை வந்துவிட்டது என்று மகிழ்ந்திருப்பதாகச் சொல்லுகிறார். இதுவே காணப்படாதவைகளின் நிச்சயம் ஆகும், காணப்படாதவைகளை நாம் நம்புவோமாகில் அதுவருவதற்கு பொறுமையோடே காத்திருப்பது தான் உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும்(ரோமர் 8:25) என்பதை அந்த ஊழியரின் அனுபவம் மூலம் நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது அல்லவா?

காணப்படாதவைகளின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி?
காணப்படாதவைகள் என்பது நம் புலண்களுக்கு எட்டாதவையே தவிர, பொய்யானவை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் சூழ்நிலைகள் நம்மை நெருக்கும் போது நம்பிக்கையற்றுப் போய்விடாமல் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும்(II கொரிந்தியர்1:20), காரணம் வாக்குக்கொடுத்தவர் உண்மையுள்ளவராய் இருக்கிறாரே... ஒருவேளை நீ நீதிமான் இல்லை அதனால் நீ கேட்டதை தேவன் தரமாட்டார் என்று சாத்தான் போதிக்கக்கூடும், ஆனால் தேவனிடத்தில் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறது எதுவோ அதை தேவன் எனக்குக் கொடுப்பார் என்ற விசுவாசத்தைத்தான் தேவன் நீதியாகப்பார்க்கிறாரே ஒழிய உன் செயல்களை அல்ல, அதற்காக துர்கிரியைகளைச் செய்யலாம் என்று அர்த்தமில்லை, தேவனுடைய பார்வையில் நீதி என்பது நாம் அவர் மீது கொண்டிருக்கும் விசுவாசமே என்று வேதம் நமக்கு தெளிவாக விளக்குகிறது(ரோமர் 4:22), நாம் விசுவாசித்தால் மட்டுமே தேவனுடைய மகிமையைக் காண்போம்(யோவான் 11:40). இது ஒரு நாளில் வந்துவிடுகிறதல்ல தேவனோடு அனுதினமும் நேரம் செலவழித்து அவருடைய வார்த்தைகளை தியானித்து அவரோடு ஜெபத்தில் தரித்திருந்து, வாக்குப்பன்னின தேவனுடைய வார்த்தைகளை நியாபகப்படுத்தி அறிக்கை செய்து, சூழ்நிலைகள் மாறாமல் இருந்தாலும் தொடர்ந்து காத்திருப்பதன் மூலம் காணப்படாதவைகளின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்,


முடிவாக, அன்பான சகோதரனே சகோதரியே, உலக மனிதனைப் போல‌ உணர்ச்சியையும், அறிவையும் வைத்து ஒரு காரியத்தை அறுதியிடாமலும், பிரச்சனைகள் சூழும்போது மற்றவர்களிடம் ஓடாமலும், அப்போது மட்டும் தேவனைத் தேடாமலும் இருந்து, தேவனுடைய வார்த்தையாகிய வேத வசனத்தில் நம்பிக்கை வைத்து, இரவும் பகலும் அதை தியாணித்து அவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, இடைவிடாமல் ஜெபித்து அவர் செயல்பட ஆவலுடன் காத்திருத்தலும் தான் தரிசித்து வாழாமல் விசுவாசித்து வாழ்வது ஆகும்...

Post a Comment

0 Comments